மலேவியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் மானிய எல்பிஜி எரிவாயுவை சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்காக மாற்றியமைத்த கும்பலை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதார செலவுத்துறை (KPDN) அதிகாரிகள் அதிரடி சோதனையில் முறியடித்துள்ளனர்.
ஷா ஆலம் அருகிலுள்ள கோலா லாங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் செப்பாட், ஜாலான் டோக் மொரி பகுதியில் உள்ள எண்ணெய் பனைத் தோட்டத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சிலாங்கூர் மாநில KPDN இயக்குநர் முகமட் ஹனிப் அசா’ஆரி கூறுகையில், “OPS TIRIS 4.0 (BERSEPADU)” நடவடிக்கையின் கீழ் சிலாங்கூர் போலீஸ் தலைமையக சிறப்பு பிரிவுடன் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்ட ரகசிய கண்காணிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சட்டவிரோத செயல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்ததாக நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சோதனையின் போது, 30 வயதிற்குட்பட்ட இரு வெளிநாட்டு ஆண்கள் 14 கிலோ மானிய எரிவாயு சிலிண்டர்களிலிருந்து 50 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றும் “டிகாண்டிங்” நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பல எரிவாயு சிலிண்டர்கள், மாற்று உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
