இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார்.
சிறீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் அந்த ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த கொடுக்கல் வாங்கலின்போது 20 இலட்சம் டொலர் நிதியை இலஞ்சமாகப் பெற்றதாக அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு எதிராக ஏற்கனவே ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் ஆறு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன தெரிவித்திருந்தhர் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.
இதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
