நடைமுறையிலுள்ள அஸ்வெசும திட்டம் மூலம் நன்மையடையும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் நிலையான வருமானத்தை பெறத் தொடங்கியுள்ளன. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த நலன்புரி திட்டத்திலிருந்து அந்தக் குடும்பங்களை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கூறுகையில்,
‘நீண்டகாலமாக அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளில் தங்கியிருப்பதைத் தவிர்த்து மக்களை தற்சார்பு பொருளாதார நிலைக்குக் கொண்டுவருவதே அரசின் நோக்கமாகும் . சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் உள்ள அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டிய குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. பல குடும்பங்களின் வருமான நிலை இன்னும் போதுமான அளவு அதிகரிக்கவில்லை என்பதால் அவர்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்த முடியாது – என்று அவர் கூறினார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மூலமாக சுமார் 16 இலட்சம் குடும்பங்கள் நன்மையடைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
