கணேமுல்லை சஞ்சீவ கொலை தொடர்பில் ‘கம்பஹா ஒஸ்மன்’ என்றழைக்கப்படும் ஒஸ்மன் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ‘கணேமுல்லை சஞ்சீவ’ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பு இலக்கம் 5 நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி போன்று வந்த நபராலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச் செயலுக்காக வெளிநாடுகளில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியமை, குற்றத்தை புரிவதற்குத் தேவையான துப்பாக்கியை வழங்கி மனிதப் படுகொலைக்கு உதவியமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மகஸின்கள் ஆகியவற்றை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா ஒஸ்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
