ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதல்வர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் இருந்ததால் அதை பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு மாற்றம் நடக்காது என்று பெரிய அரசியல் விற்பன்னர்கள் கூறினார்கள்.
ஆனால் நடக்கும் என்றே கூறிவந்தேன். எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினையை பேசினார்.
விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
