சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என நாட்டின் உயரிய இஸ்லாமியத் தலைவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் முஃப்தியான டாக்டர் நஸிருதீன் முஹம்மது நசிர், ஊடக அறிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
இஸ்லாமிய நாள்காட்டியின் 12ஆவது மாதமான துல்ஹிஜ்ஜா மே 18ஆம் திகதி தொடங்குகிறது. வானியல் கணக்கீடுகளின்படி, மே 17 அன்று சூரியன் மறைந்த பிறகும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பிறை சிங்கப்பூரின் அடிவானத்திற்கு மேலே இருந்ததால், நடப்பு மாதமான துல்கைதாவின் கடைசி நாள் மே 17ஆக இருக்கும் என்று டாக்டர் நஸிருதீன் கூறினார்.
தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டு மே 27ஆம் திகதி அந்தப் பெருநாள் கொண்டாடப்படும் என முஃப்தி அறிவித்துள்ளார்.
“இறைவழிபாடுகளையும் நற்செயல்களையும் அதிகரிப்பதன் மூலம் புனிதமான, ஆசீர்வதிக்கப்பட்ட துல்ஹிஜ்ஜா நாள்களை நிரப்புவோம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வருடாந்தர ஹஜ்ஜுப் புனிதப் பயணத்தை சிங்கப்பூரிலிருந்து 900 முஸ்லிம் யாத்திரிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
