‘அநுர குமார போகும் பாதை பிரபாகரனின் பாதையா? மக்களின் பலமா?’ – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர் சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள்.
புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ சாலே மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களுக்கு ஆதரவு கோரியும் இன்று புதன்கிழமை கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணி அமைப்பின் தலைவருமான சுகீஸ்வர பண்டார தலைமையிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சுரேஷ் சாலே உள்ளிட்ட படைத் தரப்பினருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மகஜர் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அல்லது ஜனாதிபதி செயலகத்தின் பொறுப்புவாய்ந்த சிவில் அதிகாரி ஒருவரிடம் கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்ல முற்பட்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. போராட்டக் களத்தில் இருந்த பிக்குகள், போராட்டக்காரர்கள் ‘அநுர குமார போகும் பாதை பிரபாகரனின் பாதையா? மக்களின் பலமா?’ என உரத்த குரலில் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இறுதியாக, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் மகஜரை பெற்றுக்கொள்ள முன்வந்தபோதிலும் தாம் முறையான அதிகாரியிடமே மனுவை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறியதுடன், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
