தனது மனைவியின் தம்பி மீது இருந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவரின் ஒன்பது மாதக் குழந்தையை இரக்கமின்றிக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
அவரின் விவரங்கள் விதிமுறைகளின்படி வெளியிட முடியாது. தண்டனையின் ஓர் அங்கமாக, குழந்தையின் பெற்றோருக்கு அவர் $4,000 இழப்பீடாக வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டின் மத்தியில் குழந்தையை அவ்வப்போது பராமரிக்க தனது சகோதரி வாழ்ந்த வீட்டில் பெற்றோர்கள் விட்டுச்சென்றனர். அந்த வீட்டில் அவரும், குழந்தையின் பாட்டியுமான அவரது தாயாரும் அவரின் உதவியாளரும் சேர்ந்து குழந்தையைப் பராமரித்தனர்.
வீட்டில் குழந்தையுடன் தனித்துவிடப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தமது மைத்துனர் மீதான கோபத்தை தீர்த்துக்கொள்ள ஆடவர் குழந்தையை துன்புறுத்தினார். மைத்துனர் மீது எதனால் அவருக்கு வன்மம் ஏற்பட்டது என்பது நீதிமன்றத்தில் விளக்கப்படவில்லை.
தண்ணீரில் அழுத்தி மூச்சைத் திணறடித்தல், அடித்தல், கிள்ளுதல் போன்ற கொடுமைகளைச் செய்ததோடு அதனைக் காணொளியாகவும் அவர் பதிவு செய்தார்.
மைத்துனர்மீது கோபம் வரும்போதெல்லாம் குழந்தை வலியால் துடித்து அழும் காட்சிகளைக் கொண்ட அக்காணொளிகளை அவர் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
ஆடவரின் செயலால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைந்ததாக மருத்துவர்கள் சான்றுகள் வழங்கியுள்ளனர்.
குழந்தையின் வேதனையை பதிவுசெய்தது மனிதத்தன்மையற்றக் கொடூரச் செயல் என்று நீதிபதி கண்டித்து ஆடவருக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
