வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 226 சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிவப்பு அறிவித்தல் மூலம் 35 சந்தேகநபர்களும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேரும் மேலும், சுமார் 68 முதல் 70 வரையிலான சந்தேகநபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தற்போது வரை குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக சுமார் 226 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 226 பேரில் சுமார் 90 பேர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என்றும் கூறினார்.
