யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹார்மல் சந்தியடியில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு மோட்டார் சைக்கிளை மோதியது.
இந்த தப்பியோட முயன்ற மோட்டார் சைக்கிள் மோதியதில், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
