முதல்வர் ஜோசப் விஜய்யை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ இன்று (ஜூன் 4) சந்தித்துப் பேசினார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார். அந்தவகையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரின் இல்லத்திற்குச் சென்று முதல்வர் விஜய் சந்தித்தார். உடன் அவரின் மகன் துரை வைகோவை சந்தித்துப் பேசினார்.
அதுமுதல் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக துரை வைகோ தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஒரு கட்சி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என இன்று தெரிவித்திருந்தார்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்று 3 வாரங்கள் மட்டுமே சென்றுள்ளதாகவும், குறைகளை சரிசெய்ய அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதல்வர் விஜய்யை துரை வைகோ இன்று இரவு சந்தித்தார். இந்த சந்திப்பில், திருச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக புதிய தொழில் முதலீடுகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
