மத்திய கிழக்கில் நீடிக்கும் போரால் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. இந்தநிலையில், இலங்கையில் 13 இலட்சம் பேர் அடிப்படை உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தனது எரிசக்தித் தேவையின் 63 சதவீதத்தையும் வெளிநாட்டு பண அனுப்பல்களில் 44 சதவீதத்தையும் தேயிலை ஏற்றுமதியின் 45 சதவீதத்தையும் வளைகுடா நாடுகளை நம்பியிருக்கிறது. இதனால், போர் காரணமான விலை உயர்வுகள் மற்றும் வர்த்தக சீர்குலைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் உள்ளது.
ஏற்கனவே, 47 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வு மேலும் 13 இலட்சம் மக்களை ஆபத்துக்குள் தள்ளும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில் தற்போது 31.8 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனவும் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
