கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் பலி!

கனடாவின் மார்க்கம் நகரில் கடந்த அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று முதியவர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

யோர்க் பிராந்திய காவல்துறை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 5, வெள்ளிக்கிழமை அதிகாலை 6:45 மணியளவில் கார்ல்டன் மற்றும் கென்னடி சாலைகளுக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இத்தகவலறிந்து அவசரக்கால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்கும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

“எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது முதல் தளத்தில் இருந்து அடர்ந்த புகையும் தீயும் வெளியேறிக்கொண்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குடும்பத்தினரால் மீட்கப்பட்டார் அல்லது அவராகவே வெளியேறிவிட்டார்.மற்ற இருவரை தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்து மீட்டு முதலுதவி குழுவினரிடம் ஒப்படைத்தனர்” என தீயணைப்புப் படைத் தலைவர் கிறிஸ் நீரிங் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் 70 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், ஆரம்பக்கட்ட விசாரணையின்படி இந்த விபத்தில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இருப்பதாகத் தெரியவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒன்டாரியோ தீயணைப்புத் துறைத் தலைவரின் அலுவலகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வரும் நாட்களில் இதுகுறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles