நீதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்தார்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக டில்லி சென்றுள்ள, முதல்வர் ஜோசப் விஜய், இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாக முதல்வர் பேசினார்.
மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், “வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது” என்றார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜூன் 11) புதடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார மையத்தில், நீதி ஆயோக்கின் 11ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் அளிக்கும் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
