உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்படக்கூடாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைத்தன்மையை நாட்டிற்கு வெளிப்படுத்துவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
இந்தச் சதித்திட்டத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் விடுவிக்கப்படக் கூடாது. முழுமையான விசாரணைகள் மூலம் உண்மை வெளிவர வேண்டும்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
