வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என்றும் சட்ட ஆட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்த பின்னரே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கடந்த காலங்களில் வடக்கு பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல சட்டவிரோத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என எந்தப் பாகுபாடுமின்றிஇ நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது. சில தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.
எளியோருக்கு ஒரு நீதி, பிரபலமானவர்களுக்கு ஒரு நீதி என இல்லை அனைவருக்கும் ஒரே நீதி வழங்கப்பட வேண்டும். பொலிஸார் பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காவிடில் உயர் அதிகாரிகள் அல்லது பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்க முடியும்.
கட்சி, சாதி, இனம், மதம் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எதிர்கால சந்ததியினர் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது முக்கிய இலக்கு. மொழி பிரச்சனை இன்றி சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு இளைஞர்கள் அதிகளவில் பொலிஸ் சேவையில் இணைய வேண்டும். பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருது மக்கள் வழங்கும் நன்மதிப்பே.
வடக்கு பகுதியில் பாதுகாப்பையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
