மலேசியாவின் தாமான் லெஸ்தாரி ஹிஜாவ், ஜாலான் லெஸ்தாரி ஹிஜாவ் 1-இல் ஒரு ட்ரெய்லர் லொறியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்த அவசர அழைப்பு நேற்று இரவு 7.36 மணியளவில் தங்களுக்குக் கிடைத்ததாக கூலாய் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி முகமட் ஃபவ்சி சே இத்ரிஸ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு கூலாய் மற்றும் பெக்கான் நெனாஸ் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 14 தீயணைப்பு வீரர்கள், இரண்டு மீட்பு வாகனங்கள் மற்றும் அவசர மருத்துவ மீட்புச் சேவை குழுவினருடன் விரைந்தனர்.
“இந்த விபத்தில் சிக்கிய புரோட்டோன் X70 காரில் மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் விபத்துக்குள்ளான காருக்குள் சிக்கியிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,” என்று முகமட் ஃபவ்சி கூறினார்.
இவ்விபத்தில் காரில் இருந்த மற்ற மூவர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், விபத்துக்குள்ளான ட்ரெய்லரின் சாரதி எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பினார்.
