மகாராஷ்டிரத்தில் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் இன்று சனிக்கிழமை மதியம் அனுமன் கோயில் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 18 காயமடைந்தனர்.
இந்த கிராமம் சத்ரபதி சம்பாஜிநகரிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் உள்ள மான்வத் சாலையில் அமைந்துள்ளது. இதுகுறித்து பொலீஸ் அதிகாரி கூறுகையில், கோயிலின் சபா மண்டபத்தின் மேற்கூரை பிற்பகல் 3.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
பொலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் தங்களது மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 5 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளிலிருந்து இதுவரை சுமார் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
சனிக்கிழமை அனுமன் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
