சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நாடு முழுவதும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் நினைவிழந்த பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இன்னும் சிலர் பெண்களின் நம்பிக்கையை வெல்வதற்காக திருமண வாக்குறுதிகளை வழங்கி, பின்னர் தந்திரமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துள்ளனர். இவ்வாறான சில சம்பவங்கள் படுகொலை போன்ற பாரிய குற்றங்களிலும் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினர் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், இவ்வாறான நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல்களைத் திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகைகள் அல்லது இதர பெறுமதிமிக்க பொருட்களை ஒப்படைக்க வேண்டாம் என்றும் முகம் தெரியாத நபர்களுடன் முக்கியமான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளுக்கு ஆளானவர்கள் அல்லது இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், 118, 119, 107 அல்லது 109 பொலிஸ் அவசர உதவி எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
