சிங்கப்பூரில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 77 வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறுமியின் கருவை அவர் கலைத்ததார் எனவும் கூறப்படுகிறது.
அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் 3 குற்றச்சாட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்ட முதியவர் சிறுமியின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.
2012இல் அவர் காப்புறுதி முகவராகத் தொழில் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 64. சிறுமியின் தாய் அவருக்குச் செயலாளராக பணிபுரிந்தார்.
சிறுமி உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரது தாய்க்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. சிறுமியின் தந்தையும் அதிக வேலை காரணமாக நேரமின்றி இருந்தார்.
அதனால் சிறுமியையும் அவரது மூத்த சகோதரியையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
2015இல் சிறுமிக்கு 16 வயதானபோது முதியவர் சிறுமியிடம் எல்லை மீறி நடந்துகொண்டார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். அத்துடன் அவர் சிறுமியை வற்புறுத்தி கருக்கலைப்புச் செய்ய வைத்தார்.
2019இல் சிறுமி AWARE Sexual Assault Care அமைப்பிடமிருந்து உதவி பெற்றார். முதியவர் பற்றி பொலிஸிடம் முறைப்பாடளித்தார்.
சிறுமியிடம் ஆபாசச் செயலில் ஈடுபட்டார் என குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதியவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
