மலேசியாவின் பஹாங் அருகே மாரான் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமுற்றனர்.
விபத்து சுமார் காலை 5. 40 மணியளவில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அது குறித்து 6.02 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் தெரிவித்தார்.
கார் Temerlohவில் இருந்து மாரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது MPV வாகனத்துடன் மோதியதாக நம்பப்படுகிறது. அதில் காரின் ஓட்டுநர், அதிலிருந்த பயணி ஒருவர் மற்றும் MPV வாகனத்தில் இருந்த பயணி ஒருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். MPV வாகனத்தின் ஓட்டுநரும் மற்றொரு பயணியும் படுகாயமடைந்தனர் என அவர் மேலும் கூறினார்.
அவசர அழைப்பு வந்ததும் மாரான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களுக்குள் மூவர் சிக்கியிருப்பதைக் கண்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவர்களில் மூவர் ஆண்கள். இருவர் பெண்கள் எனக் கூறப்படுகிறது.
