திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தோப்பூர் ஜின்னாநகர், 59ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில், பொறியியல்துறையில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் 21 வயதுடைய தமிழ்ச்செல்வன் தனேஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கியில் பயணித்தவரும், உயர்கல்வி வாய்ப்புக்காகப் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்தவருமான 19 வயதுடைய அருணவன் செல்வரெத்தினம் என்பவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து டிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமையச் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் கிளிவெட்டி பிரதேசத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
