ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வரலாறு காணாத இந்த கனமழையினால், 20,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோவின் நரிட்டா (Narita) சர்வதேச விமான நிலையத்தில் 7,000 பயணிகள் இரவு முழுவதும் முடங்கிப்போயினர்.
வியாழக்கிழமையன்று உள்ளூர் அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான ‘லெவல் 5’ (Level 5) அவசரக்கால எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
இன்று காலையில் இது ‘லெவல் 4’ ஆகக் குறைக்கப்பட்ட போதிலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமான புயல் சீசன் இருக்கும் என வானிலை மையம் கணித்திருந்த நிலையில், இந்த வாரத்தில் ஜப்பான் மற்றும் அதன் அண்டை நாடுகளைத் தாக்கிய அடுத்தடுத்த புயல்களைத் தொடர்ந்து இந்த கனமழை பொழிந்துள்ளது.
வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள குளிர்ந்த காற்றுடன், ஜப்பானின் கிழக்குப் பகுதிக்குள் நுழைந்த வெப்பமான ஈரப்பதக் காற்று கலந்ததால் வளிமண்டலம் கடுமையான சீர்குலைவுக்கு உள்ளாகி இந்தத் தீவிர மழை பொழிந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
