ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய போலந்தில் அமைந்துள்ள, 150 இற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட கோனோடோபி (Konotopie) கிராமத்தில், 55.6 மீட்டர் (182 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த நினைவிடத்தின் புனிதப்படுத்தும் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் கூட்டத்தின் மீது சிவப்பு ரோஜா மலர்கள் தூவப்பட்ட நிலையில், வெள்ளை உடை அணிந்த பாதிரியார்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும், புகழ்பெற்ற ‘மசோவ்ஸே’ நாட்டுப்புறக் குழுவினர் பாரம்பரிய போலந்து இசைக்கு நடனமாடிப் பாடினர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள Christ the Redeemer சிலை, அதன் பீடம் உட்பட சுமார் 38 மீட்டர் (125 அடி) உயரம் கொண்டது. ஆனால், இந்த போலந்து சிலை அதைவிட உயரமானது. இதன் 55.6 மீட்டர் உயரத்தில், கிரீடம் வடிவத்திலான 15 மீட்டர் (49 அடி) உயரப் பீடமும் அடங்கும்.
மேலும், 2010-ஆம் ஆண்டு போலந்தின் மேற்கத்திய நகரமான சுவிபோட்சினில் திறக்கப்பட்ட ‘கிறிஸ்து ராஜா’ (Christ the King) சிலையை விடவும் இது உயரமானது. அந்தச் சிலை, அது அமைந்துள்ள மேடு உட்பட தரைமட்டத்திலிருந்து 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் நிற்கிறது.
பிலிப்பைன்ஸில் சுமார் 98 மீட்டர் (322 அடி) உயரத்தில் கன்னி மரியாவின் மிக உயரமான சிலை உள்ளது. இருப்பினும், போலந்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய சிலையே ஐரோப்பாவின் மிகப்பெரிய கன்னி மரியா சிலையாகக் கருதப்படுகிறது.
