யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரில் அமைந்துள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, வீடு மற்றும் சொத்துக்களைச் சேதப்படுத்திய வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான கணேசரூபன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நெல்லியடி நகர்ப் பகுதியில் உள்ள அரச உத்தியோகத்தர் குடும்பத்தினரின் வீட்டுக்குள் போதையில் நுழைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபனும், அவரது நண்பர்களான கள்ளமண் கடத்தல்காரர்களும் அந்த வீட்டின் கண்காணிப்புக் கமராவை உடைத்துவிட்டு உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் 119 எனும் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நெல்லியடி பொலிஸார், தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
