


சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இந்த மாநாடு இடம்பெற்றது.
மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னரே மாநாடு ஆரம்பமானது.
வடக்கு – கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள், அரசியல் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
