இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார்.
தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் சோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep Trophy) அரையிறுதிப் போட்டியில், ஈஸ்ட் சோன் அணிக்காக விளையாடி வரும் அவர், தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று கப்டன் இஷான் கிஷனின் வருகை இல்லாததால் ஈஸ்ட் சோன் அணியை வழிநடத்த வேண்டியிருந்த சூர்யவன்ஷி, திங்கட்கிழமை தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
துலீப் டிராபி வரலாற்றில் மிக இளவயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பு அவருக்கு மிக அருகில் வந்தபோதிலும், சதம் அடிக்க 8 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் ஆட்டமிழந்தார்.
தனக்கே உரித்தான தீவிர அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் வெறும் 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம், 16 ஆண்டுகள் 23 நாட்களில் தனது முதல் அரைசதத்தை அடித்த லக்ஷ்மன் சிங்கின் 57 வருட கால சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார். சூர்யவன்ஷி தனது 15 ஆண்டுகள் 157 நாட்களில் இச்சாதனையை எட்டியுள்ளார்.
இப்பட்டியலில் 16 ஆண்டுகள் 307 நாட்களில் அரைசதம் அடித்த பியூஷ் சாவ்லா அடுத்த இடத்தில் உள்ளார்.
துலீப் டிராபியில் அரைசதம் அடித்த மிக இளவயது வீரர்கள்:
வைபவ் சூர்யவன்ஷி: 15 ஆண்டுகள் 157 நாட்கள்
லக்ஷ்மன் சிங் (1969): 16 ஆண்டுகள் 23 நாட்கள்
பியூஷ் சாவ்லா: 16 ஆண்டுகள் 307 நாட்கள்
