நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன 17 மலேசியர்களைத் தேடும் ஹெலிகாப்டர் தேடுதல், அந்தக் குழுவினரையோ அல்லது அவர்கள் பயணித்த ஆறு வாகனங்களையோ கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. ஃபிஷ்டெயில் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ரோஷன் பாண்டே கூறுகையில், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதியை ஹெலிகாப்டர் நான்கு முறை சுற்றி வந்ததாகவும், ஆனால் அந்தக் குழுவினரையோ அல்லது அவர்களின் உடமைகளையோ கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
அப்பகுதிக்கு அருகில் பல வீடுகளும் இருந்தன, ஆனால் வெள்ள நீரின் வேகத்தால் அந்தக் கட்டடங்களின் எந்த எச்சமும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தொடர்பு கொண்டபோது, “அந்தக் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது நீரோட்டம் அதன் உச்ச வேகத்தில் இருந்ததாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார். அந்தக் குழுவினர் அப்பகுதியை அடைந்திருக்க வாய்ப்பு குறைவாகத் தோன்றினாலும், தேடுதல் குழு அருகிலுள்ள ஒரு வனப்பகுதியையும் சோதித்தனர் என ரோஷன் கூறினார்.
பின்னர் ஹெலிகொப்டர் தாழ்வான உயரத்தில் பறந்து, அந்த இடத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் ஆற்றின் கீழ்நோக்கிப் பரவியிருந்த ஒரு பகுதியைத் தேடியது, ஆனால் அந்தக் குழுவினரின் உடமைகளைப் போன்ற எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். காயமடைந்த குழுவினரை மருத்துவமனைகளில் தேடுவதற்காக, முகமை தனது அலுவலகக் குழுவை மூன்று பிரிவுகளாகப் பிரித்ததாகவும், ஆனால் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ரோஷன் கூறினார்.
பேரழிவிலிருந்து மீட்கப்பட்ட உடல்களைச் சரிபார்த்து, அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பணியையும் அந்தக் குழு தொடங்கியது, ஆனால் இதுவரை, காணாமல் போன குழுவினரின் உடல்கள் என எதுவும் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. “தேடுதல் பணி இன்னும் தொடர்கிறது,” என்று அவர் கூறினார்.
17 மலேசியர்கள், இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு பிரித்தானியர் உட்பட 27 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆறு வாகனங்களில் அந்தக் குழுவினர் பயணம் செய்ததாக ரோஷன் கூறினார். உயரமான பகுதிக்குப் பயணம் செய்த 20 சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கத் தன்னார்வமாக முன்வந்த ஒரு மருத்துவர் உட்பட, ஏழு நேபாளப் பணியாளர்களும் அவர்களுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
