
நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் பிரிட்டன் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் ’லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில், அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு சென்றார்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு சென்ற முதல்வர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, அவர் அஜித் குமார் பங்கேற்கும் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அஜித்தின் கார் மீது அமர்ந்து விஜய் போட்டோ எடுத்தார். பின், அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் முதல்வர் விஜய்.
இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
