நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பலஸ்தீன அதிகார அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பு உறுப்பினர்களின் மீதான விசா தடைகளை நீட்டிப்பதாகக் கடந்த 16ஆம் திகதி அன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதனால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பலஸ்தீன குழுவினரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பலஸ்தீன குழுவுக்குத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விசா வழங்க மறுத்துள்ள நடவடிக்கையை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இன்று (19) வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் அனுவார் எல் அனூனி கூறுகையில்,
“ஐக்கிய நாடுகள் அவையுடனான தற்போதைய தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் தனக்குள்ள கடமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவௌ மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அமெரிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்பே பதிவு செய்யப்பட்ட உரை மூலம் நடைபெறவுள்ள 81 ஆவது கூட்டத்தொடரின்போது உரையாற்ற அனுமதிக்கும் வகையில் ஐ.நா. அமைப்பு வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
