இத்தாலியப் பாடசாலைகளில் முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யவும், வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையைச் சட்டப்பூர்வமாக நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், படசாலைச் சூழலுடன் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைகளில் புர்கா, மற்றும் நிகாப் போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு வகுப்பில் இத்தாலிய மொழி புரியாத ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் அந்தக் குழந்தை மொழியைக் கற்றுக்கொண்டு விரைவாக மற்றவர்களுடன் ஒன்றிணைந்துவிட முடியும். ஆனால், மொழி புரியாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் – அல்லது பெரும்பான்மையாகிவிட்டால் அது ஒருங்கிணைப்பு ஆகாது; அது புறக்கணிப்பு என்றே கருதப்படும்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
