கடந்த 30.07.2024 அன்று வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட
யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா .சஜீவன் வயது 27 என்ற இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியிருந்தது.
கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து மல்லாவியில் மாபெரும் போராட்டம் ஒன்றை இன்று(16) முன்னெடுத்தனர்.
19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் , துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று(16) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இன்று (16)காலை மல்லாவி மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக நிறைவடைந்தது.