இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் தற்காலிகமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவு தலைவர் படுகொலைக்கு இந்திய முகவர்கள் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் இந்தியா நிராகரித்துள்ளது.
உயர்மட்ட மோதல்கள் இருந்தாலும், தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை உணரவில்லை என, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் கூறுகின்றனர். உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களில் இருந்து திறன் மிக்க தொழிலாளர்கள் வரை, பெரும்பாலானவர்கள் இந்த நெருக்கடியை இரு அரசுகளுக்கு இடையிலான ஒரு விஷயமாகவே பார்க்கிறார்கள்.
“சில நிச்சயமற்ற தன்மை உள்ளது, ஆனால் நாங்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை” என்று பிராம்ப்டனில் உள்ள பொறியாளர் முகமது இஷ்ரத் கூறுகிறார்.
கனடாவின் தொழிலாளர் மற்றும் குடியேற்ற தேவைகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெருக்கமாக இருப்பதால் நீண்டகால பதற்றம் நிலவ வாய்ப்பில்லை என்று குடியேற்ற நிபுணர்கள் நம்புகின்றனர்.