கொவிட் 19 தொற்று தொடர்பில் தற்போது பரவிவரும் பல்வேறு தகவலின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய இரண்டு சுற்றுநிருபங்களை விரைவில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினரை இலக்காகக் கொண்டு குறித்த சுற்றுநிருபங்கள் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரணங்களும் பதிவாகியுள்ளன.

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் இரண்டு உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில் ஒமிக்ரோன் கொவிட்-19 வைரஸின் இரண்டு திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here