யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், சிறைச்சாலையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி, மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
இதன்போது பெண் வைத்தியர் கூச்சலிடவே சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றினார் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏழு நபர்களுக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
