அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில்தான் பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு சர்வதேச மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பலர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வெகுவிரைவில் மேலும் பலர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இதேபோல் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தவாறு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில்தான் பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இவருக்கு எதிராக மாத்தறை நீதிமன்றமும் கொழும்பு கோட்டை நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பஸில் ராஜபக்ஷ அரச நிதியை மோசடி செய்யவில்லையாயின் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்கலாம். இவர்கள் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்துக்கொண்டு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
பஸில் ராஜபக்ஷ இன்னும் எவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் பதுங்கியிருப்பார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சர்வதேச மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் வெகுவிரைவாக எடுக்கப்படும்- என்றார்.
