வவுனியாவில் கோயில் பூசை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, ஓமந்தை – நாவற்குளத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலை அங்கிருந்த நிரோஜனின் தாய் தட்டிக்கேட்ட நிலையில், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது தாய்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்கச் சென்ற நிரோஜனுக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது மோதலாக மாறிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் நிரோஜன் குத்தப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
