பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது.
அரசமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்பவற்றை மீறிட்டார் என்பதை பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்து இதற்குரிய ஏற்பாடு இடம்பெறுவதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெற்றிடத்தை நிரப்பும் விடயத்தில் அரசமைப்பு பேரவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எதிரணி உறுப்பினர்கள் வசம் உள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்குரிய உறுப்பினர் பலம் இல்லாததாலேயே, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரேரணையை நிறைவேற்ற முடியாவிட்டாலும், விவாதத்தின்மூலம் தகவல்களை வெளிப்படுத்த முடியும் என எதிரணி நம்புகின்றது.
