ஈரானுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பேச்சுவார்த்தையாளர்களைப் படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நம்பினர் என ‘த நியூயோர்க் ரைம்ஸ்’ மற்றும் ‘தி வோஷிங்டன் போஸ்ட்’ ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயரைக் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இவ்விரு ஊடகங்களிடமும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் முதன்மை பேச்சுவார்த்தையாளரும் ஈரான் சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரைக் குறிவைத்து படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
“அத்தகைய நபர்களை நீங்கள் கொன்றால், சமரசத்தை விரும்பும் நிதானப்போக்குடைய மனிதர்களைக் கொல்வதாக அர்த்தம்” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
‘நியூயோர்க் ரைம்ஸ்’ நாளிதழிடம் பேசிய அதிகாரிகள், இந்த ஆபத்து குறித்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு மத்திய கிழக்கு நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டதாகக் கூறினர்.
பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நோக்கில், அதில் ஈடுபடும் எதிர் தரப்பு பேச்சுவார்த்தையாளர்களையே இஸ்ரேல் இலக்கு வைப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் அது போன்ற வரலாற்றுப் பின்னணியை இஸ்ரேல் கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், இஸ்ரேலுடன் போர்நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் அமைப்பின் அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, டோஹாவில் உள்ள ஹமாஸ் வளாகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் தூதரக முயற்சிகளை முடக்கும் நோக்கம் கொண்டவை என்று அஞ்சப்படுகிறது.
