பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இது தொடர்பான புகைப்படத்தை வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெரும் காட்டுத்தீ தொடர்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் போர்டோவிற்கு அருகில் பரவலான புகையை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
மழை நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் சில இடங்களில் வெப்பம் தீவிரமடையும், சில இடங்களில் வெப்பநிலை 40°C இற்கு மேல் செல்ல வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஜனவரி முதல் பிரான்ஸில் 116,000 ஹெக்டேயருக்கும் அதிகமாகவும், ஸ்பெய்னில் 150,000 ஹெக்டேயருக்கும் அதிகமாகவும் காட்டுத்தீயால் எரிந்து நாசமாகியுள்ளன.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்த நிலைமையை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பேரழிவு என்று விவரித்துள்ளார்.
பிரான்ஸின் போர்டோவை உள்ளடக்கிய ஜிரோன்ட் பிராந்தியத்தில் 42,000 ஹெக்டேயர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளது மற்றும் 240 இற்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ஸ்பெய்னில் மாட்ரிட்டிற்கு மேற்கே உள்ள பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, இது பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் வணிகங்களைப் பாதித்துள்ளது.
இரு நாடுகளும் வரவிருக்கும் வெப்ப அலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
