ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று (01) இரவு சுமார் 8.00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (NAK) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெடிபொருளை ஏந்திய பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அவரை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்த தருணத்திலேயே வெடிபொருள் வெடித்ததில், அந்தப் பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், உணவகத்தில் தனியார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலின் இலக்கு யார் என்பது குறித்தோ அல்லது அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களின் விபரங்கள் குறித்தோ அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
