சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தண்ணீர் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் நைஜீரிய நாட்டவர்கள் ஆவர்.
அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ‘அசமகா’ பகுதியிலிருந்து மேற்கே 80 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தில் இந்த லொறி இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சோகத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவத்திலிருந்து இருவர் மாத்திரம் உயிர் தப்பியுள்ளனர்.
அவர்கள் தண்ணீரைத் தேடி 50 கிலோமீற்றருக்கும் அதிக (31 மைல்) தூரம் கால்நடையாகவே பயணித்து, பின்னர் ‘அசமகா’ பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.
அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட நைஜீரிய நிவாரணக் குழுவினர், குறித்த இடத்தை வந்தடைந்துள்ளனர்.
அங்கு இயந்திரக் கோளாறுக்குள்ளான லொறிக்கு அடியிலும் அதனைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த 49 சடலங்களையும் மீட்டுத்துள்ளதுடன், பின்னர் அந்த சடலங்கள் அனைத்தும் அதே இடத்திலேயே கூட்டுப் புதைகுழியில் அடக்கம் செய்ய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
