60 மணி நேரத்தில் பாகிஸ்தானில் வந்திறங்கிய சீன, துருக்கி இராணுவ விமானங்களால் பரபரப்பு

சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக இராணுவ விமானங்களில் போர் தளபாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத் தளங்களில் சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக இராணுவ விமானங்கள் சமீபத்தில் தரையிறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குத் தேவையான இராணுவ தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் டிரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் சீனாவை பெரிதும் நம்பி வருகிறது.

இதனிடையே, போர் விமான மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கியும் பாகிஸ்தானும் சமீபத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மேலும், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமும் அண்மையில் கையெழுத்தானது.

இத்தகைய சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கியிருப்பது பிராந்திய ராணுவ நிலவரம் குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த விமானங்களில் உண்மையில் என்ன வகையான தளபாடங்கள் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles