Colombo (News 1st) தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி கிராமத்திற்கு அருகில் Fiber படகுடன் 5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை தமிழக சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக தங்கக் கட்டிகள் படகில் கடத்தி வரப்படுவதாக மண்டபம் சுங்கத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, மன்னார் வளைகுடாவில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, கடத்தற்காரர்கள் சென்ற படகு உச்சிப்புளி – நொச்சியூரணி கடற்கரையருகே உள்ள பவளப்பாறையில் மோதிய நிலையில், படகில் சென்ற இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், படகை சோதனையிட்ட அதிகாரிகள் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தினை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கம் என்பதால், கடத்தல்காரர்கள் தீவுப்பகுதியில் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிவதற்கான தேடுதலில் ஈடுபடுவதாக, தமிழக கரையோரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.