Colombo (News 1st) காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளிடையே பரவும் காய்ச்சல், தோல் தொற்றுநோய் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில், சிறைக்கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்தமை, சிறைச்சாலையில் இந்நாட்களில் பரவிவரும் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட வைத்தியர்கள் குழாமொன்று சிறைச்சாலைக்கு இன்று சென்றிருந்தது.
தோலில் தொற்று நோய் உருவாகி இதுவரையில் 9 சிறைக்கைதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கைதிகள் இருவர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.