Colombo (News 1st) ஹொரணை – அங்குருவாதொட்ட, ஊரதுடாவ பகுதியில் காணாமற்போயிருந்த பெண்ணும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களது வீட்டை அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த இருவரும் கடந்த 18 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
தான் பணி முடிந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் மனைவியும் குழந்தையும் வீட்டில் இல்லை என கணவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், குறித்த இருவரினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் அளவிலான தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதான பெண்ணும் பிறந்து 11 மாதங்களேயான அவரது பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.