நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தப்போவ, தெதுருஓயா மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 09வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனூடாக செக்கனுக்கு 3650 கனஅடி நீர் மீ ஓயாவுக்கு விடுவிக்கப்படுகின்றது.
தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் செக்கனுக்கு 13 ஆயிரத்து 800 கனஅடி நீர் தெதுருஓயாவிற்கு விடுவிக்கப்படுகின்றது.
இதனால் தெதுருஓயாவின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதனை கருத்திற்கொண்டு ஆற்றின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றினூடாக செக்கனுக்கு 10 ஆயிரத்து 850 கனஅடி நீர் கலா வாவிக்கு விடுவிக்கப்படுகின்றது.
நிலவும் மழையுடனான வானிலையால் 10 குளங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.