Colombo (News 1st) கிரிக்கெட் நிர்வாகத்தை கலைப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமென நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், நீதிமன்றமே தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான விடயங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றத்தில் முன்வைப்பார் எனவும் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, தனிப்பட்ட சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகி விடயங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் ,மோசடி தொடர்பில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் என்ன நடந்தது என்பதை இரண்டு நாட்களில் வெளிப்படுத்துவதாக தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் ப்ரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்தார்.
இத்தொடரில் ஒரு குழுவினரின் சூழ்ச்சி காணப்பட்டதாகவும், அது தொடர்பில் வௌிப்படுத்துவதாகவும், அதற்காக கால அவகாசம் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.