Colombo (News 1st) காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஸாவில் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் தாக்குதல் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் அறிவித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு தொடர்பாக பேசிய பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலிய இராணுவம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்றும் திட்டம் இஸ்ரேலிடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
“போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது. இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு நேர அட்டவணை கிடையாது. இஸ்ரேல் இராணுவம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. எவ்வளவு நாள் எடுக்குமோ அது வரை நாங்கள் போரிடுவோம். காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. நாங்கள் ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கவில்லை, காஸாவுக்கும் எங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைக்கவே எதிர்பார்க்கிறோம். காஸாவில் மக்களின் அரசை வரவேற்கிறோம்,”
என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்றிக்குப் பிறகு எப்போதும் காஸாவிற்குள் நுழைய இஸ்ரேல் படை தயாராக இருக்கும் என்றும் அதுவே ஹமாஸ் போன்ற குழு மீண்டும் உருவாவதைத் தடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காஸாவில் கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10,818-ஆக அதிகரித்துள்ளது.
அவா்களில் 4,412 போ் சிறுவா்கள்; 2,198 போ் பெண்கள் என காஸாவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.