Colombo (News 1st) வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, குருணாகல், மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 5000 வீடுகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் மிக்க இடங்களில் இருந்து 50,000 பேர் வரை வௌியேற்றப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளரும் புவிச்சரிதவியல் நிபுணருமான லக்சிறி இந்திரஜித் குறிப்பிட்டார்.
மாத்தறை, கண்டி, நுவரெலியா, குருணாகல், மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்த 1685 வீடுகளைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.